இலக்கியம், அறிவியல், பண்டைய வரலாறு, தொல்லியல் என்று உலகின் தமிழர்கள் மற்றும் பல்வேறு தொல்குடிகளைப் பற்றிய தகவல்கள் மற்றும் கட்டுரைகள்

கவிதைகள்

பல்வேறு இதழ்களில் வெளியான எனது கவிதைகளின் தொகுப்பு

  1. இனிப்புக்குள் இருக்கும் உப்பு (பதிவுகள் இணைய இதழ், 04 டிசம்பர் 2014)
  2. மாட்டுப் பொங்கல் (பதிவுகள் இணைய இதழ், 15 ஜனவரி 2015)
  3. அன்றிலும் மகன்றிலும் (பதிவுகள் இணைய இதழ், 07 மே 2015)
  4. அத்தை ஆகிய சித்தப்பா (பதிவுகள் இணைய இதழ், 02 நவம்பர் 2015)
  5. எரிமலைப் பொங்கல் (திண்ணை இணைய இதழ், 04 ஜனவரி 2003)

வித்திடுவோம் இத்தமிழ்ப்புத்தாண்டில்!

தமிழ் எந்தன் உயிர் – என்று

தலை உயர்த்தி சொன்ன

தமிழ்க்குடியின்

இளைய தலைமுறையின் பெயரிலும்

இற்றை நாளில்

இல்லை தமிழ்!

எம்குல மாணவர்களில்

எத்தனை பேருக்கு

எட்டுத்தொகையும்

பத்துப்பாட்டும்

பதினெண் கீழ்க்கணக்கும்

செவிவழிச் செய்தியாயேனும்

எட்டியது என்று

எமக்குத் தெரிகிலை!

முற்றோதிய தமிழ்ச் சமூகத்தில் – நன்கு

கற்றோதிய மாந்தர்கள் கூடிடும் வேளையிலும்

அவர்தம் நாவினில்

நற்றமிழ் நர்த்தனம்

நரிக்கொம்பே!   

அம்மியும் குழவியும்

அருகிவிட்டதைக் கூட

பொறுத்திடலாம் – ஆனாலும்

அம்மா என்றழைத்திட்ட குழவிகள்

அருகியதை -இந்நெஞ்சு

பொறுக்குதிலையே!

அந்நிய மொழியாம்

ஆங்கில இலக்கணத்தில்

அடிசறுக்கும் கணங்களில்

அவமானப்படுத்தும் நம்மவர்கள்

‘ஒரு ஊரில்’ என்று

‘கதை’க்கின்ற கயமையை

என்னென்று சொல்வேன்?

கால ஓட்டத்தில்

இம்மண்ணிலும் தமிழ் அருகியது – திரைப்

பண்ணிலும் தமிழ் அருகியது!

எம் மக்காள் – நீவீர்

தமிழ் இலக்கணத்தில்

வினைமுற்றும்

வினையெச்சமும்

மறந்திருக்கலாம் – ஆனால்

தமிழ் மறந்த – நம்

வினையின் எச்சமும்

வினையின் முற்றும்

சற்றும் சிந்தித்திலோம்!

தமிழ் –

ஒரு மொழியோடன்றி 

தமிழ் – ஒரு நிலம்!

தமிழ் – ஓரினம்!

தமிழ் – ஓர் அடையாளம்!

தமிழ் – ஒரு கலாச்சாரம்!

அச் சாரம்

அவனி உள்ளவரையில்

ஆழப்பதிந்திருக்க

இத்தமிழ்ப் புத்தாண்டில்

வித்திடுவோம் – ஓர் அச்சாரம்!